அச்சிறுபாக்கத்தில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது.

அங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பேருந்து பயணியருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டது.

திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நிழற்குடை அகற்றப்பட்டது.

தற்போது, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பேருந்துகள் நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்த பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில், முதியோர் மற்றும் பெண்கள் கடும் வெயிலில், கால்கடுக்க பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.

எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, பயணியரின் நலன் கருதி இங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement