8,316 பிச்சைக்காரர்கள் நான்கு ஆண்டில் மீட்பு

சென்னை:சென்னை காவல் துறையில், 2021ம் ஆண்டு 'காவல் கரங்கள்' உதவி மையம் துவங்கப்பட்டது. உதவி எண், 94447 17100 என்ற எண்ணில், பொதுமக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், பிச்சை எடுப்போர், மனநலம் குன்றியோர், போலீசாரால் மீட்கப்பட்டு, காப்பகங்களில் ஒப்படைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆதரவற்றோர் உடல்கள் அடக்கம் செய்யும் பணியிலும் காவல் கரங்கள் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு, சாந்தோம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, உதவி கமிஷனர் பாஸ்கர் கூறியதாவது:
கடந்த 2021 ஏப்., 21 முதல் தற்போது வரை, 8,316 பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியோர் மீட்கட்பட்டனர். இதில், 1,319 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர்; 5,631 பேர் காப்பகத்தில் உள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 991 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.