கூழாங்கல்சேரி சாலையில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், செரப்பனஞ்சேரியில் இருந்து, கூழாங்கல்சேரி செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
இந்த சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக செல்லும் மின் வழித்தடம் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின் இணைப்பு வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம் செல்லும் மின் ஒயர், கைக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், மின் ஒயரில் உரசி, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், தாழ்வாக செல்லும் மின் ஒயர், காற்று வேகமாக வீசும் போது, ஒன்றோடு ஒன்று உரசுவதால், அவ்வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்தி அமைக்க, படப்பை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.