சுற்றுச்சுவர் இல்லாத பள்ளியில் மைதானத்திற்குள் மைதானம்?

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் காளிகாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு, தற்போது வரை சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படவில்லை.

அதே நேரத்தில் சரியான பாதை வசதியும், நுழைவாயிலும் இல்லை. இதனால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால், பரந்து விரிந்துள்ள இந்த பள்ளி வளாகத்தில், ஒருபுறம் அடர்ந்த மரங்களும், விளையாட்டு திடலும் அமைந்துள்ளது.

பள்ளி வளாகத்தில் உள்ள திடலில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 60,000 ரூபாய் மதிப்பில், கான்கிரீட் கற்களை சதுர வடிவில் அடுக்கி வைத்து, புதிய விளையாட்டு திடலை உருவாக்கி உள்ளனர்.

இந்த மைதானத்தில் விளையாடினால், கான்கிரீட் கற்களால் மாணவர்கள் தடுக்கி விழும் நிலை உள்ளது. பயனில்லாத இந்த திட்டத்திற்கு செலவிட்ட நிதியை கொண்டு, பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயிலை சீரமைத்து இருக்கலாம் என, பகுதிவாசிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Advertisement