பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு

1

ஓசூர் : கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், கட்சி துணை பொதுச்செயலர் முனுசாமி செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



முனுசாமி மீதுள்ள அதிருப்தியால் ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என ஆறு சட்டசபை தொகுதியிலும், ஒரு தரப்பு அ.தி.மு.க.,வினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பலரும் வேறு கட்சிக்கு தாவும் எண்ணத்தில் உள்ளனர். இதே போல, மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,விலும், மூத்த நிர்வாகிகளை, கட்சியின் மாவட்ட தலைமை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில், பலர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல், சமீபகாலமாக புறக்கணித்து வருகின்றனர்.


இந்நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஓசூரில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் பங்கேற்பதற்காக, கிருஷ்ணகிரிக்கு கடந்த 17ம் தேதி வந்தார்.

அவரை கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க.,வினர் பலரும் சந்தித்து பேசினர்.

நாகேந்திரனை சந்தித்த அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



முன்னாள் நகராட்சி தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் நகர செயலர் என நிறைய நிர்வாகிகள், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனை சந்தித்தனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்கு உழைத்த பலருக்கும் அ.தி.மு.க.,வில் பதவி தரவில்லை.

கூடவே, திட்டமிட்டு பலரையும், தலைவர்கள் சிலர் அரசியல் செய்ய விடாமல் நசுக்குகின்றனர். அவர்களோடு போராட முடியாது என்பதால், பா.ஜ.,வுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். அதற்காகவே, எங்களுக்கெல்லாம் ஏற்கனவே நன்கு அறிமுகமான பா.ஜ., தலைவர் நாகேந்திரனை சந்தித்து பேசினோம்.


இவ்வாறு கூறினார்.

Advertisement