'தினமலர்' கார்ப்பரேட் லீக் கிரிக்கெட்:எக்ஸ்பெடிடர்ஸ் அணி த்ரில் வெற்றி

சென்னை:'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேமிலி குரூப்' இணைந்து, டி.சி.எல்., என்ற பெயரில், 'தினமலர் கார்ப்பரேட் லீக்' சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன.

இதனுடன், பார்வதி மருத்துவமனை, ஸ்போர்ட்டஸ், கிட் புட்டே, எச்.டி.எப்.சி., வங்கி, அக் ஷய கல்பா, டிராப்டாக்ஸி, ஜி.ஓ.சி., விளையாட்டு உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்துள்ளன.

வேளச்சேரி அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம், சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில், 20 ஓவர் அடிப்படையில் நடக்கும் இப்போட்டிகள், ஜூன் 8ல் நிறைவடைகின்றன.

மொத்தம் 32 அணிகளில் ஏழு அணிகள் வெளியேறிய நிலையில், நேற்று காலை நடந்த சூப்பர் நாக் - அவுட் சுற்றில், நாட்வெஸ்ட் குரூப் அணியுடன், எக்ஸ்பெடிடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி மோதியது.

இதில், முதலில் களமிறங்கிய நாட்வெஸ்ட் குரூப் அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரங்கா என்பவர், 44 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்களை எடுத்தார்.

எட்டிவிடும் இலக்குடன் அடுத்து களமிறங்கிய எக்ஸ்பெடிடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை, எதிரணி பந்து வீச்சாளர்கள் நெருக்கடிக்கு தள்ளினர்.

எட்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், 19.5 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில், எக்ஸ்பெடிடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, த்ரில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் ஐ.என்.எப்.ஒய்., சி.டி.சி.சி., அணியுடன், பார்வதி ஹாஸ்பிட்டல் கார்ப் அணி மோதியது. முதலில் களமிறங்கிய ஐ.என்.எப்.ஒய்., - சி.டி.சி.சி. அணி, துவக்கம் முதலே அடித்து ஆடி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மரிய செல்வம் 36 பந்துகளில் 70 ரன்களும், இளங்கோவன் ராமு 38 பந்துகளில் 60 ரன்களும் எடுத்தனர்.

கடின இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய பார்வதி ஹாஸ்பிட்டல் கார்ப் அணி வீரர்கள், ரன் எடுக்க திணறினர். 11.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 188 ரன்கள் வித்தியாசத்தில் ஐ.என்.எப்.ஒய்., - சி.டி.சி.சி., அணி இமாலய வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த மற்ற போட்டிகளில், பென்டாஸ்டிக் மைட்டி ரேப்டர்ஸ், எஸ்.சி.பி., - டி.ஏ.இ., - டி.சி.எல்., ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

Advertisement