தனுஷ்கோடியில் குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்

ராமேஸ்வரம்: -விடுமுறை நாளையொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடைவிடுமுறையால் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சுற்றுலாத் தலமான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்தனர். இங்கு ஆர்ப்பரித்த கடல் அலை, அழகிய கடற்கரையும் கண்டு ரசித்தனர்.

பலர் ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடலில் குளித்து விளையாடினர். அங்கிருந்த போலீசார் வெளியேறும்படி வலியுறுத்தியும் பொருட்படுத்தவில்லை. இங்கு கார் பார்க்கிங் இன்றி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.

நெடுஞ்சாலையில் மணல் குவியல்

தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் இரண்டு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது.இதனால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. மேலும் சூறாவளி காற்றினால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மணல் புயல் வீசுவதால் டூவீலர், ஆட்டோவில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மணல் பரவி குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். டூவீலரில் செல்பவர்கள் மணல் சிக்கி கீழே விழும் அபாயம் உள்ளது.

Advertisement