மா.கம்யூ., கருப்பு கொடி கட்டி போராட்டம்

பாகூர், : பாகூரில் முன்னறிவிப்பின்றி மின்தடை செய்துவருவதால் வீதிகளில் கருப்பு கொடி கட்டி மா.கம்யூ., போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயம், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்கள், பொது மக்கள் மிகவும் கடுமையான பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னறிவிப்பின்றி பாகூர் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடையை கண்டித்தும், பாகூர் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு பொறியாளரை நியமிக்க வலியுறுத்தி மா. கம்யூ., கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று காலை, பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மா. கம்யூ., கட்சியினர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பாகூர் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Advertisement