நீரோடை துார்வாரப்படாததால் விவசாயிகள் கவலை; வேளாண் பொறியியல் துறை நடவடிக்கை அவசியம்

ஊட்டி; நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 'முதல்போகம், கார்போகம், நீர்போகம்,' என, மூன்று பருவங்களில் சராசரியாக, 20 ஆயிரம் ஏக்கரில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

அதில், ஊட்டி அருகே, எம்.பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, கல்லக்கொரை ஹாடா, மணலாடா, கொல்லிமலை ஓரநள்ளி, கேத்தி பாலாடா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் நீரோடை ஆக்கிரமிப்பு காரணமாக மழையின் போது நீரோடையில் அடைப்பு ஏற்பட்டு மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இப்பகுகளில் தான் அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதால் இங்கு அறுவடை செய்யும் காய்கறிகள் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் கூட மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் கூறுகையில்,''மாவட்டத்தில் மலை காய்கறி தோட்டங்களுக்கு இடையே செல்லும் ஓடைகளை முழுமையாக தூர்வாராததால் பருவ மழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண்மை பொறியியல் துறையினர் விரைவில் ஆய்வு மேற்கொண்டு ஓடைகளை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

Advertisement