அபாயமான 'ஆப்ரிகன் கேட் பிஷ்' விபூதிபுரா ஏரி சீரமைப்பில் சிக்கல்

பெங்களூரு :பெங்களூரு, மஹாதேவபுரா மண்டலத்தில் உள்ள, விபூதிபுரா ஏரி 45 ஏக்கர் கொண்டதாகும். ஏற்கனவே கோடைமழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை துவங்குகிறது.

எனவே விபூதிபுரா ஏரியில் மண்ணை அள்ளி சீரமைக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

ஆனால் பணிகளுக்கு ஏரியில் உள்ள 'ஆப்ரிகன் கேட் பிஷ்' ரக மீன்கள் இடையூறு செய்கின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன், ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்த போது, சில 'ஆப்ரிகன் கேட் பிஷ்'கள் தென்பட்டன.

ஏரி பகுதியில் நடை பயிற்சி செய்யும் போது மக்கள், இந்த ரக மீன்களை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இவ்விஷயத்தை மாநகராட்சியின் ஏரிகள் பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர். மழை பெய்து ஏரியில் நீர்மட்டம் அதிகரித்ததால், இந்த மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கால்வாய் வழியாக இத்தகைய மீன்கள் வந்திருக்கலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

'ஆப்ரிகன் கேட் பிஷ்' மிகவும் அபாயமானது. மனிதர்களை கடித்து காயப்படுத்த கூடியது. எனவே பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

பெங்களூரு மாநகராட்சி ஏரிகள் பிரிவு பொறியாளர் நித்யா கூறுகையில், ''விபூதிபுரா ஏரியில், 'ஆப்ரிகன் கேட் பிஷ்' கள் எப்படி வந்தன என்பது, எங்களுக்கு தெரியவில்லை. மழை நீர் கால்வாய்கள் மூலம் வந்திருக்கலாம். இவற்றை அப்புறப்படுத்துவது குறித்து, மீன்வளத் துறையுடன் ஆலோசனை நடத்துவோம்,'' என்றார்.

Advertisement