நகராட்சி,கொம்யூன் ஊழியர்கள் பல கட்ட போராட்டம் நடத்த முடிவு

புதுச்சேரி : வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நகராட்சி, கொம்யூன் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, போராட்டக்குழுவின் ஆலோசகர் ஆனந்த கணபதி நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7வது, ஊதியகுழு பரிந்துரைபடி, 33 மாதங்கள் நிலுவைத் தொகை வழங்கிட கோரி பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, சட்டசபை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. உள்ளாட்சித்துறை இயக்குநர், ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் வழங்கவும், பணியின் போது, இறந்த ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு வேலை வழங்க, முதல்வர் ஏற்றுக் கொண்டதாகவும், அதற்கான கோப்புகளை தயார் செய்யப்படும் என உறுதியளித்தார்.

அதன்பேரில், நாங்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக, முதல்வர், நிதி செயலர், இயக்குநர் ஆகியோரிடம் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினோம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஜூன் 5ம் தேதி, உள்ளாட்சித்துறை முன்பு கண்டன போராட்டமும், தொடர்ந்து 12ம் தேதி, தலைமை செயலகம் முன்பு தர்ணா போராட்டமும், 26ம் தேதி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து முன்பு, தெரு முனை பிரசாரம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement