போதைக்காக வலி நிவாரணி கும்பல் பின்னணி என்ன?

திருப்பூர் : திருப்பூரில் சமீபத்தில் போதை மாத்திரை பறிமுதல் செய்து, நான்கு பேர் கைது செய்யப்பட்ட வழக்கில், மாத்திரைகள் கோவையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த, 20ம் தேதி மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் அருகே போதை மாத்திரை புழக்கம் குறித்து அறிந்த சென்டரல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த விற்பனை செய்தது தொடர்பாக, இடுவாயை சேர்ந்த பிரபு, 42, கார்த்திகேயன், 32, கவின், 23, கார்த்திகேயன், 18 என, நான்கு பேரை போலீசார் கைது செய்து, 2,438 மாத்திரைகள், இருமல் டானிக் 70 பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, இவர்களுக்கு சப்ளை செய்தது குறித்தும், இதுதொடர்பாக மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்தனர்.

போலீசார் கூறியதாவது:

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த விற்பனை செய்தது தெரிந்தது. கைது செய்யப்பட்ட பிரபு, ஒரு பெண் பெயரில் ஆண்டிபாளையம் அருகே மருந்து கடை நடத்தி வருகிறார்.

இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. கவின் மீது, ஏழு வழக்கு உள்ளது. இவர்கள் கோவையில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement