பில்லுார் அணை நிரம்பி வழிகிறது: நள்ளிரவில் 4 மதகுகள் திறப்பு

மேட்டுப்பாளையம் : பில்லுார் அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணை நிரம்பி வழிகிறது. நான்கு மதகுகள் வழியே நேற்று நள்ளிரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட எல்லையில், பில்லூர் வனப்பகுதியில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படும்.

அதன் பின், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாகவும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று இரவு, 7:00 மணிக்கு பில்லுார் அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், வெகுவாக உயர்ந்தது. இரவு 11:30 மணிக்கு அணையில் நீர்மட்டம், முழு கொள்ளளவான, 97 அடியை எட்டியது.

பில்லூர் அணை நிரம்பி வழிந்ததால், அணைக்கு வந்து கொண்டிருந்த, 10 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீரை, அப்படியே நான்கு மதகுகள் வழியாக, பவானி ஆற்றில் திறந்து விட்டனர்.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இரவில் மைக் வழியாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement