வெள்ளியங்கிரி பக்தர்களிடமிருந்து 10.9 டன் பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பு

தொண்டாமுத்தூர் : வெள்ளியங்கிரியில், 4 மாதங்களில், மலையேறும் பக்தர்களிடம், 10.9 டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற, கடந்த பிப்., 1ம் தேதி முதல் வனத்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

மலையேறும் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க, மலையேறும் படிக்கட்டு பாதை துவக்கத்தில், வனத்துறையினர் முகாம் அமைத்து, மலையேறுபவர்களின் உடமைகளை சோதனை செய்து, பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு, 20 ரூபாய் வசூலித்து, அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டினர்.

தரிசனம் முடித்து அடிவாரம் வரும் பக்தர்கள், ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, ஏற்கனவே கொடுத்த 20 ரூபாயை, திரும்ப பெற்று செல்லும் முறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில், கடந்த, 4 மாதங்களாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் சேகரித்தனர். மொத்தம், 10.9 டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை அகற்றினர்.

Advertisement