இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை

3

பாட்னா: பீகாரில் இந்திய, நேபாள எல்லையில் வானில் ட்ரோன் போன்ற மர்ம பொருள் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மதுபானி மாவட்டத்தில் ஜெய்நகரில் எல்லை புறக்காவல் நிலையம் உள்ளது. அங்கு ஆயுதம் ஏந்திய எல்லைப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் இருந்த போது, வானில் மர்மமான ட்ரோன் போன்ற ஒளிரும் பொருட்களை கண்டுள்ளனர். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இந்த ஒளிரும் தன்மை கொண்ட பொருட்கள் தென்பட்டதாகவும், பின்னர் நேபாள எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் அதை பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.


இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினருக்கும், உள்ளூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் எஸ்.பி., யோகேந்திர குமார் கூறியதாவது;


தர்பங்கா மற்றும் டில்லியில் உள்ள இந்திய விமானப்படைக்கு இதுகுறித்து பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


ஒளிரும் பொருட்கள் நடமாட்டத்தை அடுத்து இந்திய, நேபாள எல்லையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement