தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை நீட்டிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்

திருவொற்றியூர் ''சூரை மீன்பிடித்துறைமுகத்தின், தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, 100 மீட்டர் துாரம் நீட்டிக்க வேண்டும்,” என, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது :

திருவொற்றியூர் தொகுதியில், துணை மீன்பிடித்துறைமுகம் அமைக்க வேண்டும் என, 2013ல் சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில், 2015 ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மீன்பிடி துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்தார்.

பின், 2017ல் முதல்வராக இருந்த பழனிசாமி, 242 கோடி ரூபாயில், சூரை மீன்பிடித்துறைமுகப்படும் என அறிவித்தார். அதன்படி, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்தன.

தற்போது, துறைமுக பணிகள் முடிந்து, இன்று திறக்கப்படுவது மகிழ்ச்சி. ஆனால், மீனவர்களின் கோரிக்கையின்படி, தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 100 மீட்டர் துாரம் நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், இயற்கை சீற்றங்களின்போது, அலை வேகத்தால் படகுகள் சேதமடையும்.

முகத்துவாரம் மற்றும் துறைமுக நீர் வளாக பகுதியில், விசைப்படகுகள் நிறுத்தும் அளவிற்கு ஆழம் இல்லை. எனவே, ஆழப்படுத்த வேண்டும்.

தவிர, 500 - 600 சிறிய அளவிலான பைபர் படகுகளும் நிறுத்தும் வார்ப்பு பகுதிகள் அமைக்க வேண்டும். விடுப்பட்ட பணிகளையும் முழுமையாக முடித்தால், மீனவர்களுக்கு பயனாக இருக்கும். இது, திருவொற்றியூர் அனைத்து மீனவ கிராம மக்களின் கோரிக்கை.

இவ்வாறு, குப்பன் கூறினார்.

Advertisement