கொரோனா தொற்றுக்கு சென்னையில் ஜோசியர் பலி தமிழகம் முழுதும் 69 பேர் பாதிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால், 65 வயதான ஜோசியர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் முதல், கொரோனா தொற்றில் புதிய வகை பரவ துவங்கியுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. தமிழகத்தில் 69 பேர் உட்பட, நாடு முழுதும் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் முதல் முறையாக, முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே சட்டமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசியர் மோகன், 65. இவர் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, கடந்த 15ம் தேதி, சென்னை கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக செயலிழப்புக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பும் அவருக்கு இருந்துள்ளது. அதனுடன் கடந்த 26ம் தேதி காய்ச்சல், சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா நோயாளிகளுக்கான தனி டயாலிசிஸ் பிரிவு இல்லாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் அவரை ஆம்புலன்சில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, கொரோனா பாதுகாப்பு விதிகள்படி, உறவினர்களின் சம்மதத்துடன், மோகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement