அனகாபுத்துார் வாசிகளுக்கு வீடு தர இழுபறி நள்ளிரவில் முடிவு எட்டியதால் நிம்மதி

சென்னை :அனகாபுத்துார் அடையாறு ஆற்றையொட்டி வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தாம்பரம் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செயல்படுகின்றனர்.

நேற்று முன்தினம், 40 குடும்பங்களை, பெரும்பாக்கம் குடியிருப்புக்கு, அதிகாரிகள் அழைத்து சென்றனர். இரவு 11:00 மணி வரை அவர்களுக்கு வீடு வழங்கவில்லை.

வளாகத்தில் அவர்கள், பொருட்களுடன் அமர்ந்திருந்தனர். பின், ஒரு பிளாக்கில் அவர்களை அழைத்து சென்றனர்.

அங்கு குடியிருந்த சைதாப்பேட்டை பகுதி மக்கள், 'இங்குள்ள வீடுகளில் இன்னும் சைதாப்பேட்டையை சேர்ந்த, 33 குடும்பங்கள் வர வேண்டி உள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்தோர் ஒரே பிளாக்கில் இருந்தால் வசதியாக இருக்கும்.

'அதனால், அனகாபுத்துார் பகுதி மக்களுக்கு வேறு பிளாக்கில் வீடு ஒதுக்க வேண்டும்' என அவர்கள் கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, வாரிய அதிகாரிகள், போலீசார் இணைந்து பேசி, புதிய பிளாக்கில் 40 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, அனகாபுத்துார் மக்கள் சமாதானம் அடைந்தனர்.

Advertisement