அரசு கலை கல்லுாரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அவகாசம்
சென்னை:'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை, 2,25,705 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில், 1.08 லட்சம் மாணவியர், 76,065 மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என, 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளையும், பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல், 30ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. கல்லுாரி பலகைகளில், தரவரிசை பட்டியல் ஒட்டப்படுவதுடன், கல்லுாரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.
மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுக்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில், அந்தந்த கல்லுாரிகள் வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
அத்துடன், அவகாச தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும், 30ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும்.
சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜூன் 2ம் தேதி; பொதுக் கலந்தாய்வு ஜூன் 4ம் தேதி; தொடர் கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 14ம் தேதியும் நடத்தப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன், 30ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.