மழையுடன் விடைபெற்றது அக்னி நட்சத்திரம்: வெயில் தாக்கத்தில் தப்பியது தமிழகம்

சென்னை: இந்தாண்டுக்கான அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தது.



கோடை காலத்தின் வெப்பத்தை உணர்த்தும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியது. மே 28ல் நிறைவடையும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.


அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடக்கமே வெயில் என்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் அதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4ம் தேதியன்றே இரவு பல பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து மழை கொட்டியது. அதன் பின்னர், படிப்படியாக வெயிலின் தாக்கம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரித்தது.


சில வாரங்கள் கழித்து, தென்னிந்திய கடலோர பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில் காற்று குவிதல் எதிரொலியாக தமிழகத்தின் பரவலாக வெப்பம் குறைந்து காணப்பட்டது. காலநிலை மாறவே, அக்னி நட்சத்திரத்தின் அடுத்தடுத்த வாரங்களில் பரவலாக மழை கொட்டியது.


அக்னி நட்சத்திரம் அறிவிக்கப்பட்டு இருந்த நாட்களில் (மே 4 முதல் மே 28 வரை) கோடை மழையால் வெயிலின் தாக்கம் பெரிதாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெற்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி அடுத்து வரக்கூடியக் காலங்களில் வெயில் படிப்படியாக குறைந்து மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

Advertisement