நண்பரின் காரை எடுத்து சென்று மோசடி செய்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் நண்பரின் காரை குஜராத் எடுத்து சென்று, மீண்டும் ஒப்படைக்காத நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு தயாள் ஜெனா, 57. இவரது நண்பரான குஜராத்தை சேர்ந்த பவின் ஹரியானி, அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு அக்டோர் மாதம் 24ம் தேதி புதுச்சேரி வந்த பவின் ஹரியானி, பிரபு தயாள் ஜெனா வீட்டிற்கு சென்று, அவரது காரையை, குஜராத் வரை எடுத்து சென்று வருவதற்கு கேட்டுள்ளார்.

நெருங்கிய நண்பர் என்பதால் பிரபு தயாள் ஜெனா தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். மேலும், காரின் அசல் ஆர்.சி., புக், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் பவின் ஹரியானி எடுத்து சென்றார்.

காரை எடுத்து சென்று, ஓன்றை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பிரபு தயாள் ஜெனாவிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை. அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், பவின் ஹரியானியை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பிரபு தயாள் ஜெனா அளித்த புகாரின் பேரில், பவின் ஹரியானி மீது பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement