அ.தி.மு.க., தலைவருக்கு தி.மு.க., பெண் கவுன்சிலர் பளார்; சேலம் மாநகராட்சி கூட்டத்தில் களேபரம்

5

சேலம் : சேலம் மாநகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் எதிர்க்கட்சி தலைவரை, தி.மு.க., பெண் கவுன்சிலர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் முடிந்ததாக, பாதியில் மேயர் அறிவிக்க, அ.தி.மு.க.,வினர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி கூட்டம், அதன் மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

அ.தி.மு.க., வரதராஜ் (60வது வார்டு): என் வார்டில், 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், அருகே உள்ள 58வது வார்டில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இது, ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்கும் கதை.

போனை எடுப்பதில்லை



அ.தி.மு.க., சசிகலா (25வது வார்டு): பள்ளப்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு, 38 மாதங்களாக, 'அஜெண்டாவில்'வில் மட்டும் தீர்வு சொல்லப்படுகிறது.

எப்போது அவை நடைமுறைப்படுத்தப்படும். கவுன்சிலர்கள், 'போன்' செய்தால், அதிகாரிகள் எடுப்பதுகூட இல்லை.

பள்ளப்பட்டி ஏரி கூடாரம் எரிந்து போனது குறித்து பல மாதங்களாக கேள்வி கேட்டும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளப்பட்டி ஏரி பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி (36வது வார்டு): அவசர கூட்ட தீர்மானம், 5ல், தாதம்பட்டியில் உள்ள காலி இடத்தை கிராம நிர்வாக அதிகாரியின் காத்திருப்பு அறை கட்ட வழங்க உள்ளதை நிறுத்த வேண்டும்.

அதேபோல், 23 அடி சாலை இருந்தால்தான், அனுமதி வழங்க வேண்டும் என விதிமுறை இருந்தும், அதைவிட குறைந்த சாலை கொண்ட, 'லே - அவுட்'களுக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, மாநகராட்சி அனுமதி வழங்கப்படுகிறது.

டெண்டர் வழங்குவதே குறைந்த மதிப்புக்கு பணிகளை வழங்கத்தான். ஆனால், குறைந்த மதிப்பு குறிப்பிட்டவருக்கு வழங்காமல், அடுத்து அதிகமாக கேட்டவருக்கு வழங்கப்படுகிறது. அமைச்சருக்கு வேண்டப்பட்டவருக்கு வழங்கப்படுகிறதா?

வாக்குவாதம்



அப்போது குறுக்கிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பினர். 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இளங்கோ, மிக்சர் பாக்கெட்டை, மேசை முன் துாக்கி வீசினார்.

உடனே அதே கட்சி கவுன்சிலர்களான, 45வது வார்டு சுஹாசினி, 35வது வார்டு பச்சையம்மாள் ஆகியோர், யாதவமூர்த்தி இருக்கை அருகே வந்து, வாக்குவாதம் செய்தனர்.

பின் யாரும் எதிர்பாராத நிலையில், யாதவமூர்த்தி கன்னத்தில், சுஹாசினி அறைந்தார்; தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார். இதில் நிலைகுலைந்து போன யாதவமூர்த்தியை, மற்ற கவுன்சிலர்கள் கைத்தாங்கலாக பிடித்து மீட்டனர்.

இதையடுத்து, 'எதிர்க்கட்சி தலைவரை தாக்கியது எந்த வகையில் நியாயம்?' என, எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ் உள்ளிட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மேயரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனால் மேயர், கூட்டம் முடிந்ததாக கூறி வெளியேறினார். இதையடுத்து, யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் இருக்கை முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

முறை தவறி தாக்குதல்



இதுகுறித்து யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி திட்டப்பிரிவில் நடக்கும் லஞ்சம் முறைகேடு, 'டெண்டர்' விடுவதில் முறைகேடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, தி.மு.க., கவுன்சிலர் சுஹாசினி, என்னை தாக்கினார்.

கூட்டத்தில் முறை தவறி தாக்கிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின், யாதவமூர்த்தி, அ.தி.மு.க., கவுன்சிலர் சசிகலா ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொறடா செல்வராஜ், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisement