ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலம் 3.50 ஏக்கர் மீட்பு

போச்சம்பள்ளி போச்சம்பள்ளி அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ‍சொந்தமான, 3.50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பெண்ரஹள்ளி கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 3.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், அதே பகுதியிலுள்ள ஒரு சிலர் கழிவறை மற்றும் மாட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
மேலும், சிமென்ட் சீட் கூரை அமைத்து, ஓம் சக்தி கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாருக்கு புகார் சென்றது. இதையடுத்து அவர்களின் உத்தரவின் படி, போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்புடன் நேற்று, 2 பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நடவடிக்கையின் போது, அறநிலையத்துறை தாசில்தார் தண்டபாணி, அறநிலையத்துறையின் சரக ஆய்வாளர் ராமமூர்த்தி, செயல் அலுவலர்கள் ரகுவர ராஜ்குமார், அண்ணாதுரை, வெங்கடாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement