சிகிச்சைக்காக நோயாளியை தொட்டில் கட்டி துாக்கி வந்த மக்கள் மலைப்பாதையில் 6 மணி நேர பயணம்

1

உடுமலை : உடுமலை அருகே, உடல் நலம் பாதித்த பழங்குடியினத்தைச்சேர்ந்தவரை, கரடு, முரடான மலைப்பாதையில், கொட்டும் மழையில் தொட்டில் கட்டி துாக்கி வந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு, ரோடு, மருத்துவம், வீடு, கல்வி, உள்ளாட்சிகளில் ஓட்டுரிமை என எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லை.

வன உரிமைச்சட்டப்படி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உடுமலை வனச்சரகம், ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த, திருமனுக்கு, 60, நேற்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயக்கமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், தொட்டில் கட்டி, கரடு, முரடான மலைப்பாதையில், ஏழு கி.மீ., துாரம் துாக்கி வந்தனர்.

மலைப்பகுதிகளில் மழையும் பெய்து வந்ததால், கடும் சிரமத்திற்கு இடையே, காலை, 7:30 மணிக்கு கிளம்பி, மதியம், 1:30 மணிக்கு, ஆறு மணி நேரம் பயணம் செய்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலைவாழ் மக்கள் கூறுகையில், 'வன உரிமைச்சட்டப்படி, மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு வனச்சூழல் பாதிக்காத வகையில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரும் வகையில், ரோடு அமைக்க வேண்டும். அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்தும், முதியவர்கள், கர்ப்பிணிகள் என உடல் நலம் பாதித்தவர்களை, தொட்டில் கட்டி துாக்கி வரும் அவல நிலை தொடர்கிறது.

உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்த நிலையிலும், தீர்வு கிடைக்காத நிலையே தொடர்கிறது,' என்றனர்.

Advertisement