மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு

6

மதுரை: மதுரையில் ஜூன் 22 ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் 'குன்றம் காக்க.. கோயிலை காக்க...' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22 ல் நடக்கவுள்ளது.

அதற்கான பூமி பூஜை மதுரை வண்டியூரில் நேற்று நடந்தது. ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

கோ பூஜையுடன் விழா தொடங்கியது.

விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு பந்தலின் மாதிரியை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

காலை 6:58 மணிக்கு பூமி பூஜை, முகூர்த்தக்கால் நடப்பட்டு, மாநாடு பணிகள் தொடங்கியது.

நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி தென்பாரத அமைப்பு செயலாளர் பக்தவத்சலம், தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராஜேஷ், பொதுச் செயலாளர் முருகானந்தம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர்கள் பாலாஜி, சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அறுபடை வீடு கோயில்கள்

10 நாட்களுக்கு முன்பு திறப்பு



மதுரை ரிங் ரோடு வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள காலியிடத்தில் மாநாட்டுக்கான அரங்கம் அமையவுள்ளது. மாநாட்டிற்கு 3 நுழைவு வாயில்கள் மீனாட்சி, அழகர், திருப்பரங்குன்றம் கோயில் வடிவில் அமைக்கப்படும். அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரம், மூலவர் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மாதிரி கோயிலிலும் அக்கோயில் பிரசாதம் வழங்கப்படும். இந்த அறுபடை வீடு கோயில்கள் மாநாட்டிற்கு 10 நாள்கள் முன்பு திறக்கப்படும். பொதுமக்கள் தரிசிக்கலாம்.

அவ்வையார், அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார், பாம்பன் சுவாமிகள், முருகன் அடியார்களின் படங்கள், வாழ்க்கை குறிப்புடன் மாநாட்டில் அமைக்கப்படும். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறையில் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் காட்சிபடுத்தப்படும்.

ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் ஒரு பிரிவுக்கு 2,000 இருக்கைகளுடன், 50 பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரம் லிட்டர் குடிநீர் இருக்கும். 300 முதல் 400 கழிவறைகள் 4 இடத்தில் அமைக்கப்படும். 200 பேர் கொண்ட மருத்துவ குழு 3 இடங்களில் செயல்படும்.

பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக 'புட் கோர்ட்' அமைக்கப்படும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement