யாரை காப்பாற்ற இந்த வேகம்?

1

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், யாரைக் காப்பாற்ற இந்த வேகம்' என, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை பாலியல் வழக்கில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், அ.தி.மு.க., தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்தது.

அ.தி.மு.க.,வின் தொடர் முன்னெடுப்புகளால், தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் அடிப்படையில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, தி.மு.க., அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு, இன்னும் விடை கிடைக்கவில்லை.

* இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்?

* விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?

* ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து, பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த தி.மு.க., அமைச்சர், சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

* சிறப்பு புலனாய்வு குழுவில் பணியாற்றிய டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்;

உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?

* இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார் என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது

* வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர, இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று, எதற்காக தி.மு.க., அரசின் காவல் துறை அவசர அவசரமாக, 'பிரஸ் மீட்' கொடுக்க வேண்டும்?

* யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?

பாதி நீதியால் தப்பித்து விடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும்; காட்சிகள் மாறும். விரைவில் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அந்த சார் யாராக இருந்தாலும் கூண்டேற்றப்படுவார். சாரை காக்கும் 'சார்'களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

மீண்டும் கேட்கிறோம் யார் அந்த சார்..?



சென்னை அண்ணா பல்கலை பாலியல் வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரனை குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில், ஞானசேகரனுக்கு பின்னால் இருந்த, சார் யார் என்பதே தெரியாமல் இருப்பதும், அவர் சட்டத்தின் கண்களை மறைந்து இருப்பதும் அவமானகரமானது.

சட்டத் துறையையும் நீதித் துறையையும் கேலிக்குரியதாக்கும் வகையில், அனைவர் கண்களிலும் மண்ணைத் துாவி விட்டு, அந்த சாரை தப்ப விட்டு, ஞானசேகரனுக்கு மட்டும் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கும் தி.மு.க., அரசின் சாதனை இருக்கிறதே, அது யாரும் செய்யாத சாதனை. தமிழகப் பெண்களின் மாண்பையும் மரியாதையையும் கேலிக்குரியதாக்கும் அந்த கேள்விக்கு, இன்னும் விடை அளிக்கப்படாமலேயே, உண்மை மறைக்கப்பட்டு விட்டது. இப்பவும் கேட்கிறோம்... 'யார் அந்த சார்?'

- அஸ்வத்தாமன்,

செயலர், தமிழக பா.ஜ.,

Advertisement