பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

1

சென்னை: பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;


தமிழகத்தில் பஸ்* கட்டணத்தை உயர்த்த தி.மு.க., அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தி.மு.க., அரசு தனது அடுத்த நாடகத்தை அரங்கேற்றத் தயாராகிவிட்டது என்பதைத் தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.


பஸ் கட்டண உயர்வு குறித்து உயர்நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொன்னதும் அதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதும் சரி தான். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பது தான் இங்கே அடிப்படைக் கேள்வி.


மக்களின் மனதுப்படி தான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் அனைவருக்கும் சமக் கல்வி வழங்கும் தேசியக் கல்வி கொள்கையை தி.மு.க., அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும்.


மேலும், தி.மு.க., அரியணை ஏறியது முதல் மின்சாரக்கட்டணம், சொத்துவரி, தொழில் வரி, ஆவின்பால் விலை, முத்திரைக் கட்டணம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் விலைவாசி மற்றும் வரி உயர்வால் விழி பிதுங்கி கிடக்கும் தமிழக மக்கள், தங்கள் அன்றாடப் போக்குவரத்துக்குத் தேவையான பஸ்களின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வார்களா?


மழை பெய்தால் உள்ளே அருவி கொட்டுகிறது, காற்றடித்தால் மேற்கூரை தனியே பறந்துவிடுகிறது இப்படிப்பட்ட ஓட்டை உடைசல்களுக்கு பசை போட்டு ஒட்டி "பேருந்து" என்ற பெயரில் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


அரசுப் பஸ்களின் தரத்தை உயர்த்தாத தி.மு.க., அரசு, அதன் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதை மக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு ஊழலில் ஊறிப் போன இந்த தி.மு.க., அரசு செவி சாய்க்குமா என்ன?


ஆக, ஆட்சிக் காலம் முடிவதற்குள் மீதமிருக்கும் பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரைக் கொள்ளையடிக்க தி.மு.க., அரசு முடிவு செய்து விட்டது என்பதும், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி விளம்பரப்படுத்துவதெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.


ஆனால், பஸ் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்ற தி.மு.க., அரசின் கனவு ஒருநாளும் நிறைவேறாது, அதைத் தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


ஆகவே, பஸ் கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் முடிவை தி.மு.க., அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement