தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

9

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் தங்கத்தேர் இழுப்பதற்கு, 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறது.


நேற்று முன்தினம் இரவு தங்கத்தேர் இழுப்பதற்காக, அ.தி.மு.க., மாநில மருத்துவ அணி இணைச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், திருவள்ளூர் தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன் மனைவி செல்வி உட்பட, மொத்தம் ஐந்து பேர் கட்டணம் செலுத்தி இருந்தனர்.


தேர் இழுக்கும் நிகழ்வில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாநில மகளிர் அணி செயலர் நடிகை காயத்ரி ரகுராம், தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன் மனைவி செல்வி உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தை கையில் வைத்துக் கொண்டு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஆக வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்.


இதற்கு தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வி மற்றும் சக உபயதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'கோவிலில் அரசியல் செய்யக்கூடாது; பழனிசாமி முதல்வராக வேண்டும்' என, கோஷம் போடக்கூடாது என தகராறு செய்தனர்.


தகவல் அறிந்ததும், போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர். பின், தேர் இழுப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

Advertisement