'லிப்ட்'டில் சிக்கிய மகன் பதற்றத்தில் தந்தை மரணம்

போபால்:மத்திய பிரதேசத்தில், 'லிப்ட்'டில் வெறும் மூன்று நிமிடங்கள் சிக்கித் தவித்த மகனை, காப்பாற்றத் துடித்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

ம.பி.,யின் போபாலில் ராயல் பார்ம் வில்லா காலனியில், மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தவர் ரிஷிராஜ் பட்டாநகர்.

நேற்று முன்தினம் இரவு ஹோஷங்காபாத் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தன் 8 வயது மகன் தேவன்ஷை வீட்டிற்கு வரும்படி, ரிஷிராஜ் கூறியுள்ளார்.

சிறுவன் லிப்ட்டில் ஏறிய உடனேயே, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த சிறுவன், அப்பா, அப்பா என்று அலறினான். லிப்ட் இடுக்கு வழியே இந்த அலறலைக் கேட்ட தந்தை ரிஷிராஜ், மகனை வெளியே கொண்டு வர ஓடினார்.

பதற்றத்தில், படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, ஜெனரேட்டர் அறையை நோக்கி ஓடி மின்சாரத்தை வரவழைக்க முயன்றார் ரிஷி. மூன்று நிமிடங்களில், மின்சாரம் வந்து லிப்ட் இயங்கியது. சிறுவன் தேவன்ஷ் பத்திரமாக வெளியே வந்தான்.

ஆனால், மகனுக்காக பரிதவித்த தந்தை மயங்கி சரிந்தார். முதலுதவி சிகிச்சை அளித்தும் பயனில்லை. மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement