நிதியை பெற முடியவில்லையா? அதிகாரம் எதற்கு என சீமான் கேள்வி

1

அவனியாபுரம் : மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி: கல்விக்கு நிதி கொடுக்கவில்லை என தமிழக முதல்வர், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகிறார்.

பிரதமர் மோடியை சந்தித்து மாட்டு தரகர் போல் கைகுலுக்கி பேசியபோது, நிதி பற்றி பேசி, அதை வாங்கி வந்திருக்கலாமே. மூன்று முறை 'நிடி ஆயோக்' கூட்டங்களை புறக்கணித்துவிட்டு, இப்போது மட்டும் அக்கூட்டத்துக்கு சென்றது ஏன்?

தமிழகத்துக்கு உரிய நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என்றால், ஸ்டாலின் கைகளில் இருக்கும் அதிகாரத்துக்கு என்ன பெயர்? வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு புலம்புவதற்காகவா, மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர்.

நிதி கொடுக்கவில்லை என்றால், எதற்காக மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறீர்கள். வரி செலுத்தாமல் நிறுத்தினால், மறுபடியும் அமலாக்கத்துறை வரும். அமலாக்கத்துறை வந்தவுடன், மீண்டும் பிரதமர் மோடியை நோக்கி செல்வார் முதல்வர்.

ஸ்டாலின் தந்தை பெயரில் நுாலகம், நினைவிடம், சிலைகள் கட்டுவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது. அவரது பரம்பரை சொத்துக்களை விற்றா இதையெல்லாம் கட்டியிருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மூன்றாண்டுகளில், ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

ஒரு லட்சம் போராட்டங்களை மக்களுக்குள் திணித்தது யார்? ஒரு லட்சம் பிரச்னைகளை மக்களுக்கு கொடுத்துவிட்டு, நல்லாட்சி நடத்துகிறோம் என்று கூறுவது வெட்கக்கேடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement