பாக்., ட்ரோன் சேமிப்பு கிடங்கு தகர்ப்பு செயற்கைக்கோள் படங்கள் வெளியானது

4

புதுடில்லி: பாகிஸ்தானின் முரித் விமானப்படை தளம் மீதான தாக்குதலில், ட்ரோன்கள் சேமித்து வைக்கப்பட்ட நிலத்தடி வளாகம் தகர்க்கப்பட்டது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாக்.,கில் பயங்கரவாத முகாம்களை நம் படையினர் தகர்த்ததால், பாக்., ராணுவம், ட்ரோன் தாக்குதலை நடத்தியது. 4 நாள் நீடித்த போரில், மே 10ல், பாக்.,கின் 9 விமானப்படை தளங்களை குறி வைத்து நம் படையினர் தாக்கினர்.

உடனே, போர் நிறுத்தத்துக்கு பாக்., ஓடி வந்தது. மறக்க முடியாத அடியை வாங்கியதாலேயே, கதறியபடி பாக்., ஓடி வந்தது, என்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

'மேக்ஸர் டெக்னாலஜிஸ்' நிறுவனம், முரித் விமானப்படை தளத்தின் மிக தெளிவான செயற்கை கோள் படங்களை நேற்று வெளியிட்டது.

நம் எல்லையில் இருந்து 150 கி.மீ., தொலைவில், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் இந்த தளத்தில் தான், நிலத்தடியில் ட்ரோன் சேமிப்பு கிடங்கு உள்ளது.

மேலும், சர்கோதா விமானப்படை தளம், ராவல்பிண்டியில் நுார் கான் விமானப்படை தளங்களுக்கும் மிக உதவியாக இருப்பது, முரித்.

இங்குள்ள, நிலத்தடி ட்ரோன் சேமிப்பு கிடங்கை, மிக துல்லியமாக, நம் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை, செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன. இரண்டடுக்கு ராணுவ பாதுகாப்பு, உயர் கண்காணிப்பு கோபுரங்கள் என உச்ச கட்ட பாதுகாப்பு மண்டலமாக இது உள்ளது.

இங்கு, கோட்டை போன்ற பிரதான கட்டடத்தின் 100 அடி தொலைவில், வடக்கு நுழைவு வாயிலில், 10 அடி அகலத்துக்கு மிகப்பெரிய பள்ளம் இருப்பது, செயற்கைக்கோள் படத்தில் தெரிகிறது.

பாக்.,கின் நிலத்தடி, ராணுவ உள்கட்டமைப்பை நம் படையினர் தகர்ப்பது, இதுவே முதல் முறை.

Advertisement