தமிழக கிராமங்கள்தோறும் ஊர் திருவிழா: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து பிரசாரம்

சென்னை : தமிழக கிராமங்கள்தோறும், 'ஊர் திருவிழா' நடத்தி, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நன்மைகள் குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
நாடு முழுதும் லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கையாக உள்ளது.
கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தது முதல், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், வரும், 2029 லோக்சபா தேர்தலுடன், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அதற்கு, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து, நாடு முழுதும் மக்களிடம் ஆதரவு திரட்டவும், அதன் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், தேசிய, மாநில அளவில், பா.ஜ., நிர்வாகிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக குழுவின் அமைப்பாளராக முன்னாள் கவர்னர் தமிழிசை, இணை அமைப்பாளர்களாக தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழு சார்பில், சென்னை, மதுரையில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இவற்றில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 26ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடந்த கருத்தரங்கில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியை அர்ஜுனமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஊர் திருவிழா நடத்தி, ஒரே நாடு; ஒரே தேர்தல் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குழு இணை அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி செய்து வருகிறார்.
கிராமங்கள்தோறும் நடத்தப்பட உள்ள ஊர் திருவிழாவில், ஒயிலாட்டம், மயிலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இத்திருவிழாவிற்கு வரும் மக்களிடம், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் எடுத்துரைக்கப்பட உள்ளன. முதல் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதியான, திருநெல்வேலியில் நடத்தப்பட உள்ளது.






மேலும்
-
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
-
நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்
-
நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!
-
வழக்குகளை விரைவில் முடிக்க போலி குற்றவாளிகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
-
கன்னட மொழி, இனம் எப்போது எந்த காலகட்டத்தில் தோன்றியது; சீமான் கேள்வி