பவானி ஆற்றில் சேறு கலந்த நீர்; குடிநீர் திட்டங்கள் பாதிப்பு

திருப்பூர் : பெருக்கெடுக்கும் மழைநீரில், அதிகளவு சேறு கலந்து வருவதால், பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்ட, கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. ''நீலகிரி விவசாய நிலங்களில் மேல் மண் அதிகளவில் அரிக்கப்படுவது இதற்கு முக்கிய காரணம்'' என்று கூறுகின்றனர் வேளாண் வல்லுனர்கள்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா மற்றும் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், மாயாறு உள்ளிட்ட இடங்களில் பெய்யும் மழைநீர், மலைகளின் இடையே வழிந்தோடி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு தான், திருப்பூர் மாநகராட்சி மற்றும் அன்னுார், அவிநாசி மற்றும் வழியோர கிராமங்கள், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு, பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, பவானி ஆற்றுநீர் 'பம்ப்' செய்யப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு, குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது.
இயக்க முடியாத நீரேற்று நிலையங்கள்
சில ஆண்டுகளாக பருவமழையின் போது, வழிந்தோடி வரும் மழைநீர் சேறு கலந்த நிலையில் தான், பவானி ஆற்றில் பெருக்கெடுக்கிறது. 'சேறு அதிகளவில் இருப்பதால், நீரேற்று நிலையங்களில் உள்ள 'பம்ப்'களை இயக்க முடிவதில்லை; சேறு அடைத்துக்கொள்கிறது' என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். 'இதுபோன்ற காரணத்தால், திருப்பூர் மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படும்' என, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொது அறிவிப்பே செய்திருக்கிறது.
மேல் மண் அரிப்பு
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பயிற்சிப்பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியர் ஆனந்தராஜா கூறியதாவது:
பொதுவாக பெருமழைக் காலங்களில், விவசாய நிலம் மற்றும் மலைகளில் உள்ள பாறைகளின் இடுக்கில் உள்ள மண், மணல் ஆகியவை அரித்து வருவது இயல்பு தான்; காற்று பலமாக அடித்தால் கூட, இத்தகைய மண் அரிப்பு ஏற்படும். நான்கைந்து நாட்கள் கழித்து, ஆற்றின் நிலத்தடியில் படியும் மணல், மண்ணையும் கிரகித்துக் கொள்ளும்; அதன் பின், அந்த ஆற்றுநீர் தெளிவடையும்.இருப்பினும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மேல் மண் அதிகளவில் அரித்து வரப்படுகிறது; இத்தகைய நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சாய்தள வாக்கில் விவசாயம் தவிர்க்கலாம்
சத்து நிறைந்த மேல் மண் உருவாக, பல ஆண்டுகள் பிடிக்கும். மண் அரிப்பை தடுக்க, மண்ணில் ஆழமாக சென்று ஸ்திரத்தன்மையுடன் வேர் பிடிக்கும் வகையிலான வெட்டி வேர் உள்ளிட்டவை பயிரிடப்பட்டால் மண் அரிப்பை தடுக்க முடியும். மழைநீர் வழிந்தோடி வரும் தடத்தில் சிறியளவில் தடுப்பணைகள் அமைத்து, மழைநீரை தேக்கி, வெளியேற்றுவதன் வாயிலாக மண் அரிப்பை தடுக்க முடியும். சாய்தளவாக்கில் விவசாயம் செய்வதை தவிர்த்து, படிமட்ட விவசாயம் மேற்கொள்ளும் போது, மண் அரிப்பு தடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்
-
ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
-
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
-
நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்