பழங்குடியின வாலிபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: இருவர் கைது

பாலக்காடு : பாலக்காடு, அட்டப்பாடியில் பழங்குடியின வாலிபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே, அகளி சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிஜு, 19. இவர் கடந்த 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு சித்தூர்- - புலியறை சாலை வழியாக நடந்து சென்ற போது, கட்டேக்காடு என்ற பகுதியில் கால் தவறி விழுந்தார்.

அப்போது, வேண்டுமென்றே வாகனத்தின் முன் விழுந்ததாக கூறி, அவ்வழி வந்த சரக்கு வேனில் இருந்த இருவர், சிஜுவை தாக்கினர். அப்போது, கல்லெடுத்து வேன் மீது சிஜு வீசியதில், வேன் கண்ணாடி உடைந்தது.

இதனால், ஆத்திரமடைந்த வாகனத்தில் இருந்தவர்கள், சிஜுவின் ஆடையை அவிழ்த்து, அரை நிர்வாணமாக்கி, சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். மின்கம்பத்தில் கட்டி வைத்து விட்டு அவர்கள் எஸ்கேப் ஆனார்கள். அரை மணி நேரத்திற்கு பின், அவ்வழி வந்த ஊர் மக்கள் சிஜுவை அவிழந்து விட்டனர். அகளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன்பின், உடல் நிலை பாதித்த சிஜுவை, கடந்த, 26ம் தேதி கோட்டத்தறை மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

இந்நிலையில், சிஜுவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அகளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அட்டப்பாடி டி.எஸ்.பி., அசோகன் தலைமையில் சிறப்புப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அதில், சிஜுவை தாக்கியது, அட்டப்பாடி சோலையூர் பகுதியை சேர்ந்த ரெஜின் மேத்யூ, 36, ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ், 32, ஆகியோர் என்பதும், அவர்கள் கோவையில் தலைமறைவாக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, கோவை சென்ற போலீசார், பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்.

Advertisement