பாக்., எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு

1

புதுடில்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இன்று (மே 29) நடக்க இருந்த பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டது.


காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.


இதற்கு முன்னோட்டமாக கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என சரிபார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


இந்நிலையில், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இன்று( மே29) மாலை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி சரியாக செயல்படுகிறதா? தீயணைப்புத்துறை, மீட்புப்படையினர் மற்றும் ஆபத்துகாலங்களில் மக்களை மீட்பதற்கான திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை அறிவிக்கப்பட்டது.


தற்போது, நிர்வாக காரணங்களுக்காக இந்தப் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள் தெரிவித்துள்ளன. மேலும், அடுத்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 3ம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement