தலைவர்களை ஒருமையில் பேசி சிக்கிய ஆதவ் அர்ஜூனா: இணையத்தில் வீடியோ வைரல்!

10

சென்னை: முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை ஒருமையில் இகழ்ந்து ஆதவ் அர்ஜூனா பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.



பிரபல லாட்டரி விற்பனை நிறுவன உரிமையாளர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா. அந்த பணபலத்தில் முதலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக திரைமறைவு அரசியல் செய்து வந்தார்.


பின்னர் நேரடி அரசியல் களத்தில் இறங்கியவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அங்கு கட்சித்தலைமைக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை தொடர்ந்து பேசியதால், வெளியேறும் நிலை ஏற்பட்டது.


அவரது அடுத்த இடம், விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம். அங்கு அவருக்கு தேர்தல் பிரசார பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவும், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தும் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ வைரலாகி உள்ளது.


புல்வெளியில் நடந்தபடியே வரும் ஆதவ் அர்ஜூனாவும்,ஆனந்தும் நடப்புகால தமிழக அரசியலை பேசுகின்றனர்.


அ.தி.மு.க., பா.ஜ, இ.பி.எஸ், அண்ணாமலை பற்றி இருவரும் கிண்டலாகவும், ஒருமையிலும் பேசுகின்றனர். இந்த காட்சிகள் அப்படியே வீடியோவாக பதிவாகி இருக்கிறது.


இருவரும் நடந்தபடியே பேசிக் கொள்வது இதுதான்:


ஆதவ் அர்ஜூனா:' பா.ஜ., அ.தி.மு.க.,வை கழட்டி விட்டுடுவாங்கன்னு நினைக்கிறேன். இவரு (இ.பி.எஸ்.) கூட சேர்ந்தா (சிரித்தபடியே கிண்டலாக பேசுகிறார்) கூட்டணிக்கு வருவாங்கன்னு தெரியல.


ஆனந்த்; (இடைமறித்து) அதெல்லாம் வராது.


ஆதவ் அர்ஜூனா: அண்ணாமலையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, எலெக்ஷனில் நின்னு 20 பர்சென்ட், 18 பர்சென்ட் ஓட்டு பேங்க் ...... ...... எடப்பாடியை நம்பி ...... கூட்டணி வர்ற மாதிரி தெரியல.


இவ்வாறு இருவரும் பேசியபடி செல்கின்றனர்.


சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் இடம்பெற்றுள்ள சம்பாஷணைகள் சாதாரணமானது அல்ல, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை எவ்வித முகாந்திரமும் இன்றி ஒருமையில் பேசி கிண்டலடிப்பது எப்படி சரியாகும் என்று பலரும் கருத்துகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.


அண்மையில் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி உறுதியான நிலையில், அதில் த.வெ.க.,வை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் பரவின. இப்படியான தருணத்தில் இதுபோன்ற ஒரு வீடியோ வெளியாகி இருப்பது அவ்வளவு எளிதான ஒன்றாக பார்க்க முடியாது என்கின்றனர் தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.


இதை வேண்டும் என்றே யாரோ மிக சாமர்த்தியாக பதிவு செய்து, திட்டமிட்டே இணையத்தில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகங்களை முன் வைத்துள்ளனர்.

Advertisement