அகமலையில் விளையும் காபிக்கு புவிசார் குறியீடு பெற ஏற்பாடு: காபி வாரிய துணை இயக்குனர் தகவல்

போடி சுப்புராஜ் நகரில் இந்திய காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் அலுவலகம் இயங்குகிறது. இதன் கீழ் தளத்தில் இந்திய காபி வாரிய துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனருக்கு கீழ் முதுநிலை தொடர்பு அலுவலர், இளநிலை தொடர்பு அலுவலர், உதவி விரிவாக்க அலுவலர், விரிவாக்க ஆய்வாளர், அலுவலக பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.
இந்திய காபி வாரியத்தின் தமிழக கோட்டத்தில் 18 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் அராபிகா (Arabica coffee) வகை 29 ஆயிரம் எக்டேர் சாகுபடியாகிறது. ரோபஸ்டா (Robusta coffee) வகை 6 ஆயிரம் எக்டேரில் சாகுபடியாகிறது. தேனி மாவட்டத்தில் போடி அகமலை, மேகமலை, பொம்முராஜபுரம், வடக்கு மலை, அத்தியூத்து, குரங்குணி முதுவாக்குடி, பகுதிகளில் 3578 எக்டேர் சாகுபடியாகிறது. மாவட்டத்தில் 1586 காபி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
காபியின் உலகளாவிய சந்தை மதிப்பு, விவசாயிகளுக்கான சாகுபடி யுத்திகள், மானியம், காபி செடி பராமரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து துணை இயக்குனர் தங்கராஜா தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
தமிழகத்தில் என்ன வகை காபி பயிரிடப்படுகிறது.
அராபிகா, ரோபஸ்டா என 2 வகை காபி உண்டு. அதில் தமிழகத்தில் அராபிகா வகை 90 சதவிகிதத்திற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் முதல் 1400 மீட்டர் உயரத்தில் அராபிகா வகை பயிரிட்டால் நல்லது. ரோபஸ்டா 900 மீட்டரில் இருந்து 1100 மீட்டர் உயரத்தில் சாகுபடியாகிறது.
அராபிகா, ரோபஸ்டா வகை காபி பயிர் எத்தனை நாள் பயிர்
அராபிகா 13 வகை செடிகள். தமிழகத்தில் செலக்சன் 9, செலக்சன்5 பி., செலக்சன் 13, சந்திரகிரி வகை சாகுபடியாகிறது. இதில் ஒரு ஏக்கருக்கு1210 காபி செடிகள் வைத்தால், ஏக்கருக்கு 1 டன் சாகுபடி எடுக்கலாம். காபி வாரியம் கூறும் இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த தவறுவதால், சாகுபடி குறைகிறது.
மானிய திட்டங்கள் குறித்து
காபி மறுநடவு, நீர்நிலைகளை மேம்படுத்துதல், குளம் வெட்டுதல், வட்டக்கிணறு, திறந்தவெளி கிணறு வெட்டுதல், தெளிப்பு நீர், சொட்டுநீர் பாசனத்திற்கான மானியம் திட்டங்களில் 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அரை ஏக்கர் வைத்து விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். ஆனால் குடோன் அமைக்க கோரும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் வைத்திருக்க வேண்டும். நுாறு சதவீதம் ஆன்லைன் வீதம் மானியம் வங்கி மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். ரூ.6.2 கோடி மானியம் நேரடி பொது நிதி மேலாண்மை திட்டம் மூலம் முன்னுரிமையில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வாய்ப்பு எப்படி
தமிழக காபி உற்பத்தியில் 60 சதவீதம் ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பெல்ஜியம், பின்லாந்து, ரஷ்யா, முக்கியமாக அதிக நுகர்வுத்திறன் உள்ள நாடு பின்லாந்து. அதனால் அங்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. நிழல் காபி செடிகளை சாகுபடி செய்வது இந்தியா மட்டுமே. பிரேசில்,கொலம்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் விளையும். வெயிலில் வளரும் திறன் கொண்டவை. திறனை வைத்து பார்க்கும்போது திண்டுக்கல், தேனியில் விளையும் காபி சிறந்ததாகும். திறந்த வெளி சந்தை என்பதால், ஏற்றுமதியாளர்களுக்கு உதவி செய்து வருகிறோம்.
மண் பரிசோதனை அவசியம் என கூறுவதேன்
போடி மலை பகுதியில் மண் வளம் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் சிறந்த வகையில் உள்ளது. அகமலை விவசாயிகள் சிறப்பாக காபியை பராமரித்து,இயற்கையாக வளர்க்கிறார்கள். இந்த காபிகளை உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல அரசு ரோடு வசதி செய்து தர வேண்டும்.காபி விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதே இல்லை. ஓராண்டுக்கு ஒருமுறை காபி வாரியத்தில் மண்வள பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் மண்ணில் காரத்தன்மை அதிகரிப்பதை தவிர்த்து, மகசூலை பெருக்கலாம்.
மகசூலை பெருக்குவதற்கான வழிகூறுங்கள்
மண் வள பரிசோதனையில் காரத்தன்மை பி.ஹெச். குறியீடு 6.2 என்பது சராசரியாக இருக்க வேண்டும். மிளகு ஊடுபயிராக சாகுபடி செய்தால் மண் காரத்தன்மை 5.5 இருக்க வேண்டும். இதனை எந்த காபி விவசாயும் பார்ப்பதே இல்லை. 6.2 அளவீடு காரத்தன்மை குறைவாக இருந்தால் அமில மண் என அழைப்போம். அவ்வாறு இருந்தால் டோலமைட் வேதிப்பொருட்கள் தெளிக்க வேண்டும். அதில் கால்சியம் கார்பனைட், மெக்னீஷீயம் கார்பனைட் சேர்ந்தகலவைதான் இது. அதனை மண்ணில் தெளித்தால் மண்ணின் அமிலத்தன்மை மாறிவிடும். இதனை சமன் படுத்திய பின்புதான் உரங்கள் இட வேண்டும்.மாறாக செய்யும் போது, முழுமையான சாகுபடியை எடுக்க இயலாது. தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் மண் பரிசோதனை ஆய்வு மையம் உள்ளது.அங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம். மிஜோரத்தில் உள்ள மண் வளத்தை விட, தேனி மாவட்டத்தில் சிறந்த மண்வளம் உள்ளது.
காபி விலை நிர்ணயம் குறித்த தவறான புரிதல் உள்ளதே
ஆமாம், நிறைய விவசாயிகள், வியாபாரிகளுக்கு இந்த சந்தேகம் உள்ளது. தினசரி அராபிகா நியுயார்க் நகரத்திலும், ரோபஸ்டா லண்டன் நகரத்திலும் விலை நிர்ணயிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவலாக்கபபடுகிறது. உலகில் பிரேசிலுக்கு அடுத்து, இந்தியாவிற்கு அதுவும் தமிழகத்திற்கு உடனடி விலை பட்டியல் அனுப்பப்பட்டு அதன்படி விலை நிர்ணயம் நடக்கிறது. இந்திய காபி வாரியம் அதனை விவசாயிகளுக்கு தெரிவிக்கிறது.இதில் ஒளிவு மறைவும் இல்லை.
ஏற்றுமதிக்கு விவசாயி என்ன செய்ய வேண்டும்
ஏற்றுமதியாளர் காபி வாரியத்தில் அதற்கான உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். ஒரு கண்டெய்னர் 20 டன் உற்பத்தியாளராக இருக்க வேண்டும். ஆனால் சிறு விவசாயிகள் இருக்க முடியாது, என்பதால் சிறு விவசாயிகள் ஏற்றுமதி வாய்ப்பை இழக்கின்றனர். அதனால் நாங்கள் காபி வாரியம் உழவர்உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை துவக்க அறிவுறுத்தி, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தி வருகிறோம். இதில் நிறைய பேர் ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுள்ளனர். அதிக உயரத்தில் உள்ள வெள்ளகவி கிராமத்தில் விவசாயிகளுக்கு ரூ.40 லட்சம் மானியம் வழங்கப்பட்டு, ஏற்றுமதி ரக உற்பத்திக்கும் ஊக்குவித்து வருகிறோம்.
அகமலை காபிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா
விசாகபட்டினம் அரக்குவேலி காபியை வாங்குபவர்கள் டாடா, மகேந்திரா, வால்மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பழங்குடியின விவசாயிகளிடம் வாங்கி 'பிராண்டிங்' செய்து கொடுக்கிறார்கள். விவசாயிகள் யாரும் பிராண்டிங் செய்வது இல்லை. இந்த விபரங்கள் இங்குள்ளவர்களுக்கு தெரியாமல் உள்ளனர்.கர்நாடகாவில் சிக்மங்களூரூ அராபிகா காபி, கேரளா வயநாடு ரோபஸ்டா காபி புவிசார் குறியீடு வாங்கிவிட்டனர். கடல் மட்டத்தில் அதிக உயரத்தில் விளையும் அகமலை போடி, காபிக்கு இன்சூரன்ஸ், பிராண்டிக், புவிசார் குறியீடுகள் வாங்குவது குறித்து ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது.
வாரியம் முடிவு எடுத்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும். விசாகபட்டினம் அரக்குவேலி காபியை விட, போடி காபி சுவை, மூலப்பொருட்கள், அரோமா என்றழைக்கக்கூடிய வாசனையிலும் கூட திறன் மிகுந்ததாக திகழ்கிறது. இதனால் உலகநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்றார். கூடுதல் விபரங்களுக்கு 04546 - 468139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!
-
ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணி பேட்டிங்
-
இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிந்ததில் 13 பேர் பலி: 12 பேர் படுகாயம்
-
பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா
-
பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தற்காலிகமானது; சரிப்படுத்தி விடுவேன் என்கிறார் அன்புமணி