பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தற்காலிகமானது; சரிப்படுத்தி விடுவேன் என்கிறார் அன்புமணி

10

சென்னை : '' பா.ம.க.,வில் நிலவும் குழப்பங்கள் தற்காலிகமானவை. சரியாகிவிடும். சரிபடுத்திவிடுவேன்,'' என அக்கட்சி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.



மோதல்




பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. மகனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிய ராமதாஸ், கட்சியில் இருந்து அவரை வெளியேற்ற பொதுக்குழுவை கூட்டப் போவதாக தெரிவித்துள்ளார். இன்று பா.ம.க., பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் திலகபாமா அந்தப் பதவியில் தொடர்வார் என அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார்.


இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து வருகிறார். காலையில் 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நிலையில் மாலையில் 6 பேரை சந்தித்தார்.



புரிந்து கொள்ளுங்கள்




இதனைத் தொடர்ந்து அன்புமணி பேசியதாவது: இந்த சந்திப்பின் நோக்கம், உங்களுக்கு இட்ட பணிகளை ( உறுப்பினர் புதுப்பிப்பு பணி)3 வாரங்களில் முடிக்க வேண்டும். பா.ம.க., அடுத்த கட்டத்திற்கு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலி உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம்.


இதுவரை எனக்கான சூழல் வரவில்லை. புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கட்சியில் சில குழப்பங்கள் நடக்கிறது. அனைத்தும் தற்காலிகமானது. சரியாகிவிடும். சரிப்படுத்திவிடுவேன்.




பொதுக்குழுவுக்கே அதிகாரம்




திலகபாமாவிற்கு மாற்றாக வேறு நபர் நியமித்து அறிவிப்பு வந்தது. அடுத்த 10 நிமிடங்களில் அவர் பதவியில் நீடிக்கிறார் என கடிதம் கொடுத்தேன். திலகபாமாவை மாற்ற எனக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழு தான் நியமனம் செய்தது. என்னை உட்பட நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.


அபாண்டம்




நான் தலைவர் இல்லை. உங்களைப் போல் ஒரு தொண்டன். மனதில் நிறைய இருக்கிறது. பேச முடியவில்லை. எவ்வளவு பழி, அபாண்டங்களை சுமந்துள்ளேன். அவை அத்தனையும் மேலும் என்னை உறுதிப்படுத்தி உள்ளது . வேகமாக முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்தை கொடுத்துள்ளது. அது தான் நடந்து வருகிறது.


யார் யாரோ பழியை அபாண்டத்தை போட்டார்கள். ஆனால் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவர்கள் என்னை நேசிப்பது என்னை தான். எனது அம்மா மீது சிறுதுரும்பை கூட பட விடமாட்டேன். அபாண்டமான வார்த்தைகள் தான் தாங்க முடியவில்லை. அதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும்.



சுதந்திரமாக




யாரும் கவலைப்பட வேண்டாம். பொறுப்பை மாற்றிவிட்டார்கள் என கடிதம் வந்தால் கவலைப்பட வேண்டாம். அடுத்த 10 நிமிடங்களில் பதில் கடிதம் வரும். அது தான் செல்லும். எவ்வளவு குழப்பங்களை பார்த்தோம்.எனக்கு பொறுப்பு நீங்கள் கொடுத்ததுதான். தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்து மன உளைச்சலில் இருந்தேன். நேற்று தான் விடுதலை கிடைத்தது. இனிமேல் சுதந்திரமாக செயல்படுவேன்.

எந்த தடைகள் வந்தாலும் அதை உடைத்து எறிந்து முன்னேறுவோம். பா.ம.க.,வை ராமதாஸ் துவங்கினார். அவரின் கொள்கை, கோட்பாடுகளை கடைபிடிப்போம். கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறும். அடுத்த கட்டம் நமது ஆட்சி தமிழகத்தில் நடக்கும். எனக்கு நல்ல குழு அமைந்துள்ளது. அதனை கெடுக்க முயற்சி நடக்கிறது. இவ்வாறு அன்புமணி பேசினார்.




முகவரி மாற்றம்





இந்நிலையில், பா.ம.க.,வின் தலைமை அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றி உள்ளார். புதிய அலுவலகம் தி.நகர், திலக் நகர் தெருவில் அமைந்துள்ளது. பா.ம.க., உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் புதிய முகவரி இடம்பெற்றுள்ளது.

Advertisement