நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 13,624 பேர் பதிவு

புதுச்சேரி; சென்டாக் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை 31ம் தேதியுடன் காலக்கெடு முடிகின்ற நிலையில் இதுவரை 13,624 பேர் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது.

www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

நேற்று வரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 13,624 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இ.மெயில் மூலம் பதிவு செய்திருந்தனர். இதில் 11,149 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து இருந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 9,299 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து 1,850 மாணவர்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

நான் நீட் படிப்புகளுக்கும் இன்றும் (30ம் தேதி) நாளை (31ம் தேதி) வரை சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.தொழில்முறை டிகிரி, டிப்ளமோபடிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஆறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் உள்ள பி.பி.ஏ., பி.வி.ஏ., உள்ளிட்ட நுண்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு



நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்த 12ம் தேதி முதல்ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தாலும் ஜாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ் கிடைப்பதில் மாணவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வரும் ௭ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement