கமல் படங்களை வெளியிட மாட்டோம்: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிரடி

32

பெங்களூரு : 'கமல் மன்னிப்பு கேட்கும் வரை, அவரது திரைப்படங்களை வெளியிட மாட்டோம்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.


நடிகர் கமல், 'தமிழில் இருந்து கன்னடம் உருவானது' என தெரிவித்த கருத்து, கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையாவும் இதை கண்டித்தார். தன் பேச்சுக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 'மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று கமல் கூறி உள்ளார்.


இந்நிலையில், பெங்களூரில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன், கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் நேற்று காலை போராட்டம் நடத்தினர். திடீரென வர்த்தக சபைக்குள் நுழைந்தனர். அங்கு கூட்டம் நடந்த இடத்திற்கு சென்று, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கமல் திரைப்படத்தை வெளியிடக் கூடாது' என்று கோஷம் எழுப்பினர்.


வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்திடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, 'கமல் மன்னிப்பு கேட்கும் வரை, அவரது திரைப்படங்கள் இங்கு திரையிடப்படாது' என்று, நரசிம்மலு அறிவித்தார்.


ஆனால், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா மட்டும் கமலுக்கு ஆதரவாக, 'இன்ஸ்டாகிராமில்' ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், 'கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய அனைத்தும் திராவிட மொழிகளின் ஒரே குடையில் வருகின்றன. நமக்கு சில பொதுவான தன்மைகளும், மொழி வம்சாவளியும் இருக்கலாம். நாம் அனைவரும் திராவிடர்கள்.


'கமல் பேசியதற்காக அவரது திரைப்படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா. ஹிந்தி திணிப்புக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். அதற்கு முதலில் நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை வைத்திருக்க வேண்டும்' என, பதிவிட்டு உள்ளார்.

நான் கமல் ரசிகன்: சிவராஜ்குமார் உருக்கம்



தனியார் நிகழ்ச்சியில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது: நான் கமலின் தீவிர ரசிகன். அவர், எப்போதும் எனக்கு ஊக்கமாக இருந்து உள்ளார். கர்நாடகாவை பற்றி பெருமையாக என்னிடம் நிறைய முறை பேசி உள்ளார். தக் லைப் இசை நிகழ்ச்சியில் என் குடும்பத்தை பற்றி அவர் பெருமையாக பேசியதை தான் அனைவரும் பேசி இருக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு கன்னட மொழி பற்றி அவர் பேசியதை அனைவரும் பேசுகிறீர்கள்.

அவர் நடித்த பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்தது பெருமையான விஷயம். யாராவது ஒருவர் கன்னடத்தை பற்றி பேசினால் மட்டும் கன்னடம் மீதான உங்கள் பாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த பாசம் எப்போதும் இருக்க வேண்டும். கன்னடத்திற்காக அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம். தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன்.

கமல், கன்னட சினிமாவுக்கு நிறைய செய்து இருக்கிறார். எப்போதும் அனைவரையும் மதிக்கக்கூடிய நல்ல திரைக்கலைஞர். எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க நினைக்க மாட்டார். என் மீது உள்ள பாசத்தில் அவர் ஏதோ பேசப்போக அது தவறாகி விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement