ஹோட்டல் பணிப்பெண் கொலை பா.ஜ., பிரமுகர் மகனுக்கு ஆயுள்

டேராடூன்: உத்தராகண்டில், ஹோட்டல் பணிப்பெண் கொலை வழக்கில், பா.ஜ., முன்னாள் அமைச்சரின் மகன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தராகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முந்தைய பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா.

இவரது மகன் புல்கிட் ஆர்யா, 'வனாந்திரா ரிசார்ட்' என்ற தங்கும் விடுதியை ரிஷிகேஷில் நடத்துகிறார். அதில், வரவேற்பாளர் பணியில் இருந்த அங்கீதா பண்டாரி, 19, கடந்த 2022ல் காணாமல் போனார். ஆறு நாட்கள் கழித்து அருகில் உள்ள சில்லா கால்வாயில் அவரது சடலம் கிடைத்தது.

இது குறித்து போலீசார் விசாரித்தபோது, ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் நெருக்கமாக இருக்கும்படியும், அவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும்படியும் அங்கீதாவை, புல்கிட் ஆர்யா கட்டாயப்படுத்தியது தெரிந்தது.

அங்கீதா மறுக்கவே, புல்கிட், அவரது நண்பர்கள் சவுரவ் பாஸ்கர், அங்கீத் குப்தா ஆகியோர், அவரை கொலை செய்தனர். உத்தராகண்டை உலுக்கிய இந்த வழக்கை, கோத்வாரா மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.

கடந்த 2023 ஜனவரியில் துவங்கிய விசாரணையில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 97 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இரண்டரை ஆண்டு நீடித்த இந்த கொலை வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பா.ஜ., முன்னாள் அமைச்சரின் மகன் புல்கிட் ஆர்யா, அவரது கூட்டாளிகள் சவுரவ் பாஸ்கர், அங்கீத் குப்தா மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நேற்று தீர்ப்பு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டிருந்ததால், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எஸ்.பி., தலைமையில் நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

நீதிமன்ற ஊழியர்களை தவிர, வேறு யாரையும் 100 மீட்டர் சுற்றளவுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. தீர்ப்பு வெளியானதும் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement