அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த 2 இந்தியர்களுக்கு ஐ.நா.,வில் கவுரவம்


நியூயார்க்: ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த ராணுவ பிரிகேடியர் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகியோருக்கு, மறைவுக்கு பிந்தைய பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் 77வது ஐ.நா., அமைதிப்படை தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.


உலகளாவிய அமைதியை பின்பற்றுவதில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



அமைதி காக்கும் பணியின்போது, இறந்த நபர்களுக்கு, இந்த நாளில், ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் டாக் ஹம்மர்ஷோல்ட் பெயரில் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.


அதன்படி, நேற்று முன்தினம் நடந்த விழாவில், அமைதி காக்கும் பணியில் உயிரிழந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் அமிதாப் ஜா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட 57 பேர் கவுரவிக்கப்பட்டனர்.


ராணுவ பிரிகேடியர் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகியோருக்கான பதக்கத்தை, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டனி குட்டரசிடம் இருந்து ஐ.நா.,வுக்கான நம் நாட்டின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பெற்றுக் கொண்டார். உயிரிழந்த அமிதாப் ஜா, சிரியா - இஸ்ரேல் போர் நிறுத்தம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.


மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில், ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றி சஞ்சய் சிங் உயிரிழந்தார்.

Advertisement