அப்பா - மகன் மோதலால் தத்தளிப்பு; விரக்தியில் பா.ம.க., தொண்டர்கள்

4



தர்மபுரி : பா.ம.க.,வின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள தர்மபுரி மாவட்டத்தில், அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தந்தை - மகன் மோதலால் நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தர்மபுரி மாவட்டத்தில் 251 பஞ்சாயத்துகள் உள்ளன. கிராமப்புறங்கள் அதிகமுள்ள இம்மாவட்டத்தில், ஜாதி அடிப்படையில் ஓட்டுகள் விழுவது இன்றளவும் உள்ளது.

நான்குமுறை வெற்றி



வன்னியர் சமுதாய மக்கள் அதிகமுள்ள இப்பகுதியில், பா.ம.க., தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி வென்ற இரண்டு தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. பா.ம.க., தலைவர் அன்புமணி போட்டியிட்டு, அ.தி.மு.க., வேட்பாளர் மோகனை வீழ்த்தினார். அது மட்டுமின்றி லோக்சபா தேர்தல்களில், பா.ம.க., - தி.மு.க., இரு கட்சிகளும் தலா நான்கு முறை வெற்றி பெற்றுள்ளன.


கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., எளிதாக வெற்றி பெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் மட்டும் தொடர் இழுபறி இருந்தது. பா.ம.க., வேட்பாளராக களமிறங்கிய சவுமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலையில், அரூர் பகுதியில் அவருக்கு ஓட்டுகள் குறைந்ததால், தர்மபுரியிலும் தி.மு.க., வென்றது.

அரவணைப்பு



தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியைவிட, பா.ம.க.,வுடன் எந்த கட்சி கூட்டணி என்பதன் அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும்.


கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில், பா.ம.க., இரண்டு, அ.தி.மு.க., மூன்று என அவர்கள் அமைத்திருந்த கூட்டணி மொத்த தொகுதியையும் கைப்பற்றி, தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி கூட இல்லாத மாவட்டமாக மாற்றியது.


ராமதாஸ், அன்புமணி, சவுமியா ஆகியோர் தர்மபுரியை தங்கள் தாய் வீடு போல பார்க்கிறோம் என பேசுவதும், அவர்களை அன்போடு இம்மாவட்ட மக்கள் அரவணைப்பதும், இங்கு பா.ம.க.,வுக்கு வலிமையான ஓட்டு வங்கியை தக்க வைத்தது.



கடந்த 1989- தேர்தல் முதல், பா.ம.க., சார்பில் பாரிமோகன், இளங்கோவன், செந்தில் ஆகியோர் இங்கு எம்.பி.,யாக இருந்துள்ளனர்.


இந்நிலையில், தற்போது பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலால், தர்மபுரி மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement