கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு

3

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 4 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன.


வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே 24ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


இடுக்கி, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா என பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, முன் எச்சரிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.


மழை காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் 103 வீடுகள் பகுதியாகவும், 9 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. தற்போதுள்ள சூழலில் 10 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. கல்லார்குட்டி, மலன்காரா, பொன்முடி, பாம்பலா அணைகள் திறக்கப்பட்டுள்ளன. மூவன்புலா ஆறு அபாய கட்டத்தை தாண்டி உள்ளது.


எர்ணாகுளம் திருமராடி பகுதியில் மரம் விழுந்ததில் அன்னகுட்டி சாக்கோ (80) என்பவர் பலியானார். ஆலப்புழா அருகில் புன்னம்பரா பகுதியில் நீரில் மூழ்கி ஜேம்ஸ்(65) என்பவர் உயிரிழந்தார். மாநிலத்தில் மொத்தம் மழைக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.


கனமழை தொடர்ந்து நீடிப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணைகளின் நீர் இருப்பையும், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement