காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் கணக்கிட 58 குழுக்கள் நியமனம் உதவி வன பாதுகாவலர் தகவல்

தேனி: 'மாவட்டத்தில் காட்டுபன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களை கணக்கிட வனவர் தலைமையில் 58 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்,' என, ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் அரவிந்தன் தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கண்டறிய மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டில் 14 இடங்களிலும், ஸ்ரீவி.,மேகமலை புலிகள் காப்பகத்திற்கு கட்டுப்பட்ட 44 இடங்கள் என 58 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவில் வனவர், வி.ஏ.ஓ.,பி.டி.ஓ.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேத விபர அறிக்கையாக தயாரித்து வழங்கியவுடன், உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். காட்டுப் பன்றிகளால் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளோம். காப்புக் காடுகளில் இருந்து ஒரு கி.மீ., துார உள்ள பகுதியில் பாதிப்பு இருந்தால் மண்டலம் 'ஏ' எனவும், காப்புக் காடுகளில் இருந்து 3 கி.மீ.,துாரத்திற்கு உள்ளே இருந்தால் மண்டலம் 'பி' எனவும், 3 கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருந்தால் மண்டலம் 'சி' எனவும் பிரித்துள்ளோம். இதில் ஏ. பி. மண்டலங்களில் காட்டுப்பன்றிகள் சேதம் ஏற்படுத்தி இருந்தால் அவற்றை விவசாயிகள் வனத்துறை உதவியுடன் காப்புக்காடுகளுக்கு விரட்ட வேண்டும். மண்டலம் சி பகுதியில் வந்திருந்தால், கூண்டு வைத்து கால்நடை டாக்டரின் ஆலோசனைப்படி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement