'தி.மு.க.,வை நா.த.க., தனித்து நின்று தோற்கடிக்கும்'

மதுரை: 'தி.மு.க.,வை நா.த.க., தனித்து நின்று தோற்கடிக்கும்; எந்த ஒரு கூட்டணியிலும் சேர மாட்டோம்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நா.த.க.,வின் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சீமான் தலைமையில் நேற்று மதுரையில் நடந்தது.

சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நா.த.க., தான் பெரிய கட்சி. சட்டசபையில் மக்களுக்காக பேசும் குரல் இல்லை. இந்த முறை உறுதியாக சட்டசபை செல்வோம். தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள கன்னடர்களுக்கு மனமில்லை. தொல்லியல் அறிஞர்கள் கன்னட மொழியின் வரலாற்றை விளக்க வேண்டும். கீழடி முழுவதும் அகழாய்வு நடத்தினால் தமிழர்களின் வரலாறு வெளிவந்திருக்கும்.

உலகின் முதல் மொழி தமிழ் எனக் கூறிவிட்டு, பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழில் கல்வெட்டு வைக்கவில்லை. தமிழை ஏற்றுக் கொள்ளாத ஈ.வெ.ரா.,வை 'தமிழர் தந்தை' என்கின்றனர்.

ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசனுக்கு சீட் கொடுத்தது போல், வைகோவுக்கும் கொடுத்திருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்குமான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும்.

த.வெ.க., வருவதால் எங்கள் ஓட்டு சிதறாது. தி.மு.க., வை நா.த.க., தனித்து நின்று தோற்கடிக்கும். எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது கடினம் என்றார்.

Advertisement