பழுது நீக்கப்படாத பள்ளி பஸ்கள் கூடுதல் அவகாசம் வழங்கல்

திருப்பூர்; ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ள நிலையில், பழுது நீக்கப்படாத பள்ளி பஸ்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி, வட்டார போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

ஆர்.டி.ஓ.,க்களிடம் தகுதிச்சான்றிதழ் பெறும் பள்ளி பஸ்கள் மட்டுமே, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி பஸ்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,873 பள்ளி பஸ்கள் மே முதல் வாரம் துவங்கி, மூன்றாவது வாரம் வரை நான்கு கட்டங்களாக ஆர்.டி.ஓ., க்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த, மே, 26ம் தேதி நிலவரப்படி, 1,341 பள்ளி பஸ்கள் சான்றிதழ் பெற்ற நிலையில், இன்னமும், 532 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. பள்ளி பஸ்கள் இன்றைக்குள் (31ம் தேதி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என ஆர்.டி.ஓ.,க்கள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.

ஜூன், 2ல் பள்ளிகள் திறப்பு உறுதியாகியுள்ள நிலையில், பழுது, மறுசீரமைப்பு காரணமாக ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறும் அவகாசம், ஜூன், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்துக்கு அனுமதியில்லை



வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், 'தகுதிச்சான்றிதழ் பெறாத பள்ளி பஸ்கள் இயக்கத்துக்கு அனுமதியில்லை. பள்ளி நிர்வாகங்கள் இவ்விஷயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். விதிமீறினால், பஸ் உரிமம், டிரைவர் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். ஜூன், 10 வரையிலான கூடுதல் காலஅவகாசத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்து பள்ளி பஸ் தகுதிச் சான்றிதழ்களை கட்டாயம் பெற்றுக் கொண்டு, அதன் பின் தான் பள்ளி பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement