இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி

12

பெங்களூரு: இன்று (ஜூன் 1) முதல் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.


பொதுவாக அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாவிட்டால், அதற்கு என தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.


பொதுத்துறை வங்கியான கனரா வங்கியை பொறுத்தவரை,

நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.2 ஆயிரம்,

சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000

கிராம பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.500 என குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும்.

அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், அனைத்து சராசரி மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையை கனரா வங்கி ரத்து செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி தான் முதல்முறையாக இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த அபராதமும் இல்லாமல் வங்கிக்கணக்குகளை பணமின்றி பராமரிக்க முடியும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.

சராசரி மாதாந்திர இருப்புத்தொகை பராமரிக்க தேவையில்லை என்ற முடிவால்

சேமிப்புக் கணக்குகள்

சம்பள கணக்குகள்

என்ஆர்ஐ எஸ்பி கணக்குகள் வைத்து இருப்பவர்கள் பயன் அடைவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.

Advertisement