அதிக உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் முத்துசாமி யோசனை

ஈரோடு: ஈரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். எம்.பி., அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி.,யும் மாநில துணை செயலாளருமான பிரகாஷ், சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தி.மு.க.,வில் இளைஞரணி என்பது மிக முக்கிய அமைப்பாகும். கட்சியிலும், ஆட்சியிலும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் முக்கிய நிகழ்வுகளை, இளைஞரணியே மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரும், தங்களால் அதிகபட்சம் முயன்றவரை பலரை உறுப்பினராக்கி, நிர்வாகிகளாக உயர்த்த வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், நிர்வாகிகள் ரகுராம், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement