கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைகேட்பு கூட்டம் முடக்கம்

சென்னை : கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை, காய்கறி கடை போன்றவற்றை நடத்துகின்றன. அவற்றில், 45,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.


அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க, இரு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர் நாள் நிகழ்வு நடத்தி, அவர்களின் குறைகளை கேட்கப்படும்.


இக்கூட்டம், மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, மண்டல இணைப் பதிவாளர் தலைமையில் நடத்தப்பட்டது. தற்போது, பல மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை.



கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறியதாவது:
ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அந்த நாளில் கூட்டம் நடத்தக்கூடாது என, வலியுறுத்தப்பட்டது. அதைமீறி கூட்டம் நடத்தினர். ஊழியர்களும் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.


இது, சட்டசபையில் கூட்டுறவு துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்பதால், தேதி அறிவிக்கப்பட்டு முறைப்படி கூட்டம் நடத்தப்பட்டது. புகார்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். சமீபகாலமாக கூட்டத்தை நடத்துவதில்லை.



ஆனால், கூட்டம் நடத்தியது போல பதிவு செய்து, அதிகாரிகளை தனியே சந்தித்து அளித்த மனுக்களை, கூட்டத்தில் வாங்கியது போல பதிவு செய்கின்றனர். இதனால், ஊழியர்களின் குறைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.


ரேஷன் கடையில், 'சர்வர்' பாதிப்பு உட்பட பல பிரச்னைகள் உள்ளன. எனவே, பணியாளர் நிகழ்வில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, கூட்டம் நடத்தி பணியாளர்களிடம் குறைகள் கேட்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement